இலங்கை தளம்பினால் பிராந்திய அமைதி குழப்புமாம் –விமல் எம்.பி.

இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என நாம் நம்புகின்றோம். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுக் காலை வருகை தந்துள்ள சீன இராணுவத்தின் ‘யுவான் வாங் 5’ கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கின்றது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்குச் சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனைப் பேண வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். இந்து சமுத்திரம் போர்க் களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் இந்து சமுத்திரத்தை நாம் பாதுகாத்தே தீர வேண்டும்.
சிலர் இதனை உளவுக் கப்பல் என்றனர். நாம் இதனைத் தொழில்நுட்பக் கப்பல் என்கின்றோம். கப்பலுக்கு இலங்கை வர அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மில் சிலர் இருந்தோம்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோகாத சீனா

சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்குக் கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
நாம் எதனைச் செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை. இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.
இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளையே இலங்கை எதிர்பார்க்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடன்களைவிட முதலீடுகளால் சீனா எமக்கு அதிகம் உதவும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் -–என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *