திருமலை சிறுபோக நெல் அறுவடைக்கு தேவையான டீசலை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு விசேட திட்டம்- அரச அதிபர் கருத்து!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடைக்கு தேவையான டீசல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறைமைப்படுத்தப்பட்ட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக திருகோணமலை  மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.

 மாவட்ட செயலகத்தில் இன்று (17) மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதனடிப்படையில் மாவட்டத்தில் மொரவெவ, கோமரங்கடவெல, பதவிசிறீபுர ஆகிய பிரிவுகளில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விவசாயிகளுக்கு அறுவடைக்கான டீசல் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் என்றவாறு சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் கிரமமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின்படி பிரதேச செயலாளர்கள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் இச்செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயற்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் விதைப்பு நடவடிக்கள் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட பிரதேசங்களில் நெல் அறுவடை தற்போது தொடக்கம் செப்டம்பர் மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் கூடுதலாக நடைபெறும் என்பதனால் அதற்கான எரிபொருளை கிரமமான முறையில் விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு இதன்போது விவசாய சங்க பிரதிநிதிகள் அரசாங்க அதபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காலப்பகுதியை அடிப்படையாக கொண்டு அறுவடைக்கான டீசல் தேவைப்பாடு தொடர்பான பட்டியல் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அப்பட்டியலிற்கேற்ப விவசாயிகளுக்கு டீசல் வழங்கும் செயற்பாடு பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயற்பாடு துரிதப்படுத்தப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெல் அறுவடைக்காக கொண்டுவரப்படும் டீசல் முற்றாக விவசாயகளுக்கே விநியோகிக்கப்படும். அது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்பார்வை செய்யுமாறு இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
மேலும் பெரும்போகத்தில் உழவு நடவடிக்கைக்கான டீசலை விவசாயிகளுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது குறித்த பிரதிநிதிகள் அரசாங்க அதிபரிடம் வேண்டிக்கொண்டனர்.

உரிய விடயத்தை உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக  அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் விவசாயத்திற்கான உரத்தேவைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாப்பட்டன.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். குகதாசன், தேச உர செயலகத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் , விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகளும், மெய்நிகரி ஊடாக பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *