கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற சபை அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படமையை கண்டித்தும், கிழக்கு மாகாண ஆளுநர் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதையும் கண்டித்தே இப் போராட்டம் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிகளின் மூலம் மக்களுக்கான சேவையை செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும், எல்லாவற்றுக்கும் மாநகர ஆணையாளர் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சில மீள பெறப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு நல்லதொரு ஆணையாளரை நியமிக்குமாறு உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
