சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே சுமந்திரன் அமெரிக்காவுக்கு செல்கிறார். இது தொடர்ச்சியாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு செய்யும் சதி என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இன் 15ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியாவில் கடந்த 1,728 நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், ஐசிசியிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற அமெரிக்காவுக்கு சுமந்திரன் பயணிக்கிறார், இது தொடர்ச்சியாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு செய்யும் சதி. இலங்கையின் பிரதிநிதியாக பயணித்து தமிழர்களை பலவீனப்படுத்தவே அவர் அமெரிக்கா செல்கிறார்.
இலங்கைக்கு எதிராக லண்டனில் உள்ள உலகளாவிய உரிமை உண்மை நிலைகள் நிர்வாகம் இனப்படுகொலை வழக்கை பதிவு செய்தது என்பதை நாம் அறிவோம். தற்போது இந்த வழக்கு ஐசிசி வழக்கறிஞரின் கையில் உள்ளது.
ஐசிசியின் படி இந்த வழக்கை எடுத்துக்கொள்வதற்கான தீர்ப்பைப் பார்த்த பிறகு, இலங்கை இனப்படுகொலையை விசாரிக்க ஐசிசி வழக்கறிஞர் இந்த வழக்கை, ஐசிசியின் நீதியரசருக்கு அனுப்பலாம்.
குறித்த வழக்கிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு முயலும் முயற்சி இது. ஐசிசி வழக்கறிஞரை முறியடிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் செய்யும் உதவியாக இந்த நாடகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் குணசித்திர வேடங்களை பூண்டுள்ளனர்.
அமெரிக்கா செல்லும் 3 தமிழர்களும் கூட்டாட்சி பற்றி பேசுவது போல் பாசாங்கு செய்கிறார்கள். இது சுமந்திரனின் பொய்யான செய்தி. அவருக்கு அமெரிக்க அரசியல் சாசனம் தேவைப்பட்டால் நாங்கள் அதனை அவருக்கு வழங்கமுடியும்.
இரண்டாவதாக, கீழ்நிலை அமெரிக்க அரசுத் துறை அதிகாரிகளை சந்திப்பது எவராலும் எளிதாக ஏற்பாடு செய்யப்படலாம். சுமந்திரன் இன்று அமெரிக்காவிற்கு செல்லும்போது அவர் அழைப்பின்றி யாரையும் சந்திக்க முடியும்.
ஐசிசி வழக்கறிஞரின் கைகளில் இருக்கும் இலங்கையின் வழக்கை குழப்பி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் செய்யும் உதவியே அவர் செல்வது என அவர்கள் தெரிவித்தனர்.
