போதைக்கு அடிமையாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்-ஆறு.திருமுருகன் கவலை!

யாழ் குடாநாட்டில் சமீபத்தில் போதைவஸ்து பாவனை மிக முக்கியப் பிரச்சனையாக காணப்படுகிறது. கலை ,பண்பாடு , பாரம்பரியத்திற்கு பேர் போன யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்டு இருப்பது மிகக் கவலையான விடயம் என செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் பிரதிநிதிகளோ,கல்விமான்களோ,சமூகப் பொறுப்புணர்வு உடையவர்களோ சரியான முறையில் அக்கறை எடுக்காத காரணத்தினால் வடக்கில் இது அதிகரித்து செல்கின்றது.

அதேவேளை போருக்கு பிற்பாடு பல இளைய தலைமுறைகளை இழந்து இருக்கின்ற இந்த நிலையிலே தொடர்ந்து இளைய தலைமுறைகள் அநியாயமாக போதைவஸ்துக்கு ஆளாகி மரணத்தைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த போதைவஸ்து பாவனையானது இன்று கட்டுக்கு அடங்காமல் இளைய தலைமுறையினரிடத்தே அதிகரித்து செல்கின்றது.

யார் இதை செய்விக்கிறார்கள் ? எவ்வாறு இவர்களுக்கு குடா நாட்டிலே விரைவாக வந்து சேர்கின்றது? போதைவஸ்துக்கு அடிமையானவர்களுக்கு மாற்று வழி என்ன? இலங்கையில் போதைவஸ்து பாவனையினை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு வழிகளை கையாளா விட்டால் மிகப்பெரிய ஆபத்தை இந்த நாடு சந்திக்கும்.

நீதி மன்றங்கள் கூட பல தடவைகள் போதைவஸ்து பாவனையாளர்கள் மற்றும் அத்தொழிலினை செய்பவர்களை கண்டித்துள்ளது.

ஆனால் சமூகத்தின் முக்கியஸ்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலகங்கள் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக ஒன்று கூடி இதுவரை ஒரு ஆக்கப்பூர்வமான எடுக்காத காரணத்தினால் எங்கள் சமுதாயம் மிக கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் கூட போதைவஸ்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.இது தொடர்பாக பேராசிரியர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

பத்திரிகைளிகளில் செய்தி வந்திருக்கின்றன.இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.இது பரிதாபத்துக்குரிய விடயமாகும்.

வடக்கில் மட்டுமல்ல மலையகத்திலும் இந்த பிரச்சனைகள் காணப்படுகின்றன,இதில் கூடுதலாக தமிழ் இளைஞர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு அவசரமான தீர்மானத்தினை ஒற்றுமையாக ஒன்று கூடி இதனை தடுப்பதற்கு என்ன வழி என இதுவரைக்கும் சரியாக ஆராய்ந்ததில்லை.

வடக்கிலே மிக முக்கியமான ஒரு கூட்டத்தினை நடாத்தி தமிழர்களுடைய பகுதியிலே கூடுதலான அளவில் போதைவஸ்து பாவனை நிலவுவதற்கான என்ன காரணங்கள் என கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான சரியான வழியினை பின்பற்ற வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் ,பிரதேச செயலகங்களின் தலைவர்கள் ,பிரதேச சபைகள் ,மாநகரசபைகள்,பெரியோர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர்களிடையே தாண்டவம் ஆடுகின்ற இந்த போதைவஸ்துவினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *