
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரொய்ட்டர்ஸூக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வருவார் என்று அவரின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன், நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பொதுஜன பெரமுனவினர், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைத்திருந்தனர்.
இதனை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மீண்டும் நாடு திரும்புவது தொடர்பில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் மீண்டும் அமெரிக்கா சென்று வசிப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்