புத்தளம் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘அல்பா’ வர்த்தக கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கலந்துரையாடலில் வடமேல் மாகாண ஆணையாளர் கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத் உள்ளிட்ட மாகாண ஆணையாளர் அலுவலக அதிகாரிகளும், புத்தளம் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன், நகரசபை உயரதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் உட்பட பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்பா வர்த்தக நிலைய பணிகளின் முன்னேற்றங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் வர்த்தக நிலைய கட்டட பணிகள் தொய்வின்றி விரைந்து முன்னெடுப்பதற்கான வழிவகைகளும் இங்கு ஆராயப்பட்டன.
அத்துடன், அல்பா வர்த்தக கட்டடத்திற்கான Lift மற்றும் Excalator என்பனவற்றை விரைவில் பொருத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து, வடமேல் மாகாண ஆணையாளர் கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத் உள்ளிட்ட மாகாண ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் குழு புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘அல்பா’ வர்த்தக கட்டட நிர்மாண பணிகளை பார்வையிட்டனர்.
மறைந்த முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸினால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ‘அல்பா’ வர்த்தக கட்டட நிர்மாணப் பணிகள் அவரின் மறைவை அடுத்து , தற்போதைய நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தனது மேற்பார்வையின் கீழ் குறித்த வர்த்தக கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார்.
இந்த அல்பா வர்த்தக கட்டடத் தொகுதி மூலம் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் ஒரு கேந்திர நிலையமாக புத்தளம் இருக்கப் போகிறது.

நான்கு தளங்களையும், வான் தளம் எனும் திறந்த மாடிகளையும் கொண்ட மேற்படி புத்தளம் அல்பா வர்த்தக கட்டடத் தொகுதி வடமேல் மாகாணத்தில் முதல்தர வர்த்தக கட்டடத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்