செங்கலடி பிரதேச சபைக்கு சொந்தமான வேப்பவட்டவான் பகுதியில் அமைத்துள்ள மூலிகைத் தோட்ட காணியை ஏறாவூர் நகரத்திற்குட்பட்ட முஸ்லிம் நபரால் கையகப்படுத்த எத்தனித்த வேளை தனது முயற்சியால் தடுக்கப்பட்டதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ச.சுரேந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், செங்கலடி பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கும், தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய நபர்களை வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு மூன்றாவது தடவையாகவும் போடப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரினால் 10 ஏக்கர் காணியை அடைக்க முற்பட்ட வேளையில், மக்கள் வழங்கிய வேண்டுகோளுக்கிணங்க குறித்த இடத்திற்கு சென்று காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தியதாகவும், செங்கலடி பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் காணி அபகரிப்புக்கள் ஏற்படாத வகையில், மக்களின் நலன்சார்ந்து தனது சேவையை மேற்கொள்வேன் என்றும் இதற்கு இளைஞர்கள் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
