சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்பு! – அந்தரத்தில் தொங்கும் ரயில் பாதை

புத்தளம் – கொழும்பு புகையிரத பாதையின் மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழகியதுடன், 20 இற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 96 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், பல வீதிகளும் தாழிறங்கியுள்ளதுடன், வீடுகள் பலவற்றின் பாதுகாப்பு மதில்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக உடைந்து போயுள்ளது.

இந்த நிலையில், புத்தளம் – சிலாபம் புகையிரத வீதியின் பல இடங்களில் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதுடன், முந்தல் – மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத வீதி கடும் சேதமடைந்து காணப்படுகிறது.

சுமார் 100 மீற்றர் வரை பாரிய குழிகள் ஏற்பட்டு குறித்த புகையிரத பாதை சேதமடைந்த நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்கிய போதும் இவ்வாறு புகையிரத பாதை பாரிய அளவில் சேதமடையவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொழும்பு – புத்தளம் புகையிரத பாதை இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதால், கொழும்பில் இருந்து பங்கதெனிய வரையான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *