
கொழும்பு,ஓக 24
தமக்கான எதிர்ப்பை மௌனிக்க செய்யவே ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகிறது என்று மாற்றுக்கொள்கைககளுக்கான மையம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குறிவைத்து பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்று அந்த மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாதத் தடைச் சட்ட 9வது பிரிவின் கீழ் வசந்த முதலிகே – ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைக்க விடுத்த உத்தரவு கண்டிக்கத்தக்கது.
இது ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை நிர்வாகி துஷ்பிரயோகம் செய்ததற்கு மற்றொரு உதாரணம் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9ஆம் பிரிவு பாதுகாப்பு அமைச்சருக்கு 3 மாதங்கள் வரை காவலில் வைக்க உத்தரவுகளை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.
இதுஇ ஒரு நேரத்தில் 3 மாதங்களுக்கு பின்னர் 12 மாதங்கள் வரை நீடிக்கப்படலாம்.
குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொருவரையும் விசாரிக்க இலங்கையில் ஏராளமான சட்டங்கள் உள்ளன.
எனினும் போராட்டக்காரர்களை குறிவைத்து அவர்களின் செயல்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சமப்படுத்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.