
கொழும்பு,செப் 12
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் தேசிய நேரத்திற்கு அமைய 12.30 அளவில் அமர்வு ஆரம்பமாகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீப் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது சபையில் உரையாற்றுகையில் 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளதென அலி சப்ரி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, யுக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன.
இந்த தீர்மானத்திற்கு எதிராக பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன.
இதேவேளை, இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.