இரசாயன பசளையை தடை செய்து சேதனப் பசளையை மட்டும் பயன்படுத்த எடுத்த தீர்மானம்!

இரசாயன பசளையை பூரணமாக தடை செய்து, சேதனப் பசளையை பயன்படுத்த தன்னிச்சையாக தீர்மானம் எடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஸ்தம்பிதமடையச் செய்தமை ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் இந் நடவடிக்கையால் விவசாயிகளுக்கும் விவசாய துறைக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரியவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரியே உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளான டி.டப்ளியூ. நாணயக்கார, டப்ளியூ.டி.எஸ். சுமித் எரந்திக்க மற்றும் கொட்டகொட விவசாய சங்கத்தின் செயலர் விவசாயி டி.டப்ளியூ. அமரதிவாகர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.ரி.பி. தெஹிதெனிய, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று (12) பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இவ்வாறு அடுத்த வருடம் பெப்ரவரி வரை மனு ஒத்தி வைக்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கை சனத் தொகையில் 28 வீதமானோர் நேரடியாக விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும், மேலும் 40 வீதமானோர் மறைமுகமாக விவசாயத்தில் தங்கியுள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரசாயன பசளையில் உள்ளடங்கும் பொஸ்பரஸ் பொட்டாசியம் அனைத்து விவசாய நிலங்களுக்கும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், 1960 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பசுமைத் திட்டத்துக்கு அமைய இந்த இரசாயன பசளைகள் அறிமுகம் செய்யப்பட்டதாக மனுவில் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் 10 வருட காலத்துக்குள் சேதனப் பசளையை பூரணமாக பயன்படுத்தும் விவசாய எழுச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனால் இரசாயன பசளை பூரணமாக தடை செய்யப்பட்டதாகவும் மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் முழு நேர விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வில் பாரிய மரண அடி விழுந்ததாகவும், ஒரே இரவில் எந்த நிபுணத்துவ ஆலோசனையும் இன்றி இரசாயன பசளையை தடை செய்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரசாயன பசளையை தடை செய்து சேதனப் பசளையை ஊக்குவிக்க எந்த நடை முறை சாத்தியமான முறையான திட்டங்களும் இல்லாத நிலையில், சேதனப் பசளையை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இதற்கு மக்களிடையே பாரிய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இரசாயன பசளைக்கான தடை தளர்த்தப்பட்டதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறான நிலையில் எவ்வித முறையான ஆய்வுகளுமின்றி, நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாமல், இரசாயன உரத்திற்கு தடை விதிக்க ஜனாதிபதியினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *