தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையில்லையேல் கிழக்கைப் பறித்துவிடுவர் சிங்களவர்! சாணக்கியன் எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாகச் செயற்படாவிடின், எதிர்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை நேற்று (24) சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே என்னைப் பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சினைகளைக்  கதைக்கின்றார், எங்களுக்காகப் பேசுகின்றார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எனினும், நான் அனைத்துப்  பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும்போது எங்களைப் பாராட்டுவதை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றன.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார், நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னைப் பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை – என்றார்.

Leave a Reply