கிராம அலுவலர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்தது

தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப் பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து.

அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை மன்னாரில் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் மன்னார் மாவட்ட மட்ட குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 25ம் திகதியன்று மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்டான்லி டீமெல் ,தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது  உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சத்துணவு பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள், வறுமையிலும், பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுக்கும் வழிவகைகள், சிறுவர்களின் போசாக்கு முதல் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த  நிகழ்வில் சுகாதார திணைக்கள பணிப்பாளர்,இராணுவ பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உலக உணவு திட்ட பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *