மனிதக் கடத்தல் வழக்கு – இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் கைது!

ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.57 அளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக் கடத்தலுக்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர் அவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து,இலங்கை தூதரகத்தின் அதிகாரி குஷானை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இந்தநிலையில் இன்று நாடு திரும்பியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பெண்களை ஓமானில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் மனித கடத்தலுக்காக பயன்படுத்தியமை தொடர்பாக இதுவரை பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *