மாவட்ட அபிவிருத்தி சபையை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – டக்ளஸ் திட்டவட்டம்!

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(29.11.2022) நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை. 

2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது. 

தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவே பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

எவ்வாறெனினும், தமிழ் மக்களின்  நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை,  பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது”  எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply