புதிய வருடத்தில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 17ஆம் திகதி!

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக எதிர்வரும் 10ஆம் திகதியை முழு நாளும் ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி 09ஆம் திகதி சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2022.12.03ஆம் திகதிய 2308/62 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையைப் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக எதிர்வரும் 08ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி மீண்டும்
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *