ஹிட்லரின் ஆட்சி நாட்டுக்கு தேவையில்லை-ரணிலை எச்சரிக்கும் சஜித் அணி!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்சவின் வழியில் சென்றால் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்காது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும் போது ஜனநாயக ரீதியாகப் போராடுவது அவர்களின் உரிமை. அதைத் தடுக்க முடியாது.அவ்வாறு போராட்டம் நடத்தினால் இராணுவத்தைக் கொண்டு தடுப்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவதை ஏற்க முடியாது. இது ஜனநாயக மீறல் – மனித உரிமை மீறல். இதைத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் செய்தார்.

கோட்டாவின் வழியில் ரணிலும் சென்றால் நாடு அவ்வளவுதான். நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் பின்தள்ளப்படும்.நாடு இப்போது இருக்கின்ற நிலையில் இந்த மாதிரியான ஹிட்லரின் செயற்பாடுகள் சரி வராது.இதன் மூலம் பிரச்சினைகள் தீராது.பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும். அதுதான் ஒரு நாட்டுத் தலைவருக்கு அழகு.

ஜனாதிபதி பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் எதற்காக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடப் போகின்றார்கள்?பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவிகள் அவசியம். ஆனால், மக்களை அடக்கும் ஜனநாயக விரோத அறிவிப்புக்களை வெளியிட்டால் அந்த நாடுகளின் உதவி கிடைக்காது.

கோட்டாவின் வழியில் செல்ல வேண்டாம். சென்றால் அவ்வளவுதான் என்று ரணிலிடம் மீண்டும் மீண்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *