மின்சார தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 50 இலட்சம் வழங்கிய தோட்ட நிர்வாகம்

மஸ்கெலியா – சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியான நல்லையா சிவக்குமாரின் குடும்பத்திற்கு, 50 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க ஹொரண பெருந்தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினால், இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு, நேற்றைய தினம் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு குறித்த தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குடும்பத்தினருக்கு 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவுள்ளது.

கவரவில தோட்டத் தொழிற்சாலையில் பணிபுரிந்த வேளையில், நல்லையா சிவக்குமார் என்ற 33 வயதான தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், கடந்த 24 ஆம் திகதி மின்சார தாக்கத்துக்கு உள்ளானார்.

இதையடுத்து, 11 நாட்களாக கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியே அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக, கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மரணித்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீட்டை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *