நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பொகவந்தலாவை கேர்க்கசோல்ட் மத்தியப் பிரிவில் இன்று (04) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேர்க்கசோல்ட் மேல், மத்திய, கீழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது கேர்க்கசோல்ட் மத்தியப் பிரிவிலிருந்து டின்சின் நகர்வரை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நோர்வூட் பிரதேசசபை தவிசாளர் ரவி குழந்தைவேலு, வட்டார உறுப்பினர்கள் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
‘ஹிசாலினியின் இரண்டாம்கட்ட பிரேதப் பரிசோதனை துரிதப்படுத்த வேண்டும்’, ‘சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களை கைதுசெய்ய வேண்டும்’, ‘தரம் 07 வரை கல்விகற்ற ஹிசாலினி ரிசாட் பதியுதீனின் வீட்டுச் சுவரில் ஆங்கிலத்தில் எழுதியது எவ்வாறு சாத்தியமாகும்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.