வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கையில் குவியும் டொலர்கள்..! அமைச்சர் மகிழ்ச்சித் தகவல்

2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும். அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மொத்த எண்ணிக்கை 3,313.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த நவம்பர் மாதம், உத்தியோகபூர்வ முறைகளை பயன்படுத்தி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கான புதிய ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி,ஒரு பரிவர்த்தனையின் மூலம் ஒவ்வொரு 20,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் அனுப்பும் பணத்திற்கும் 1,000 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது பணம் அனுப்பும் முகவர்களால் விதிக்கப்படும் பரிவர்த்தனை செலவை திருப்பிச் செலுத்தவே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *