தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்வு

தேர்தல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியகி கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா, குடியிருப்பு  கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அதன் பின் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. தற்போது ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் உள்ளூராட்சி சபை வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பேசி மூன்று விடயங்களை அரசிடம் முன்வைத்துள்ளோம்.

முதலாவதாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக தற்போது அரசமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகாரப் பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மூன்றவதாக வடக்கு – கிழக்கில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறையில் – சமஷ்டி கட்டமைப்பில் – உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

இந்த மூன்று விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்ல வேண்டும் என்று அரசிடம் முன்வைத்துள்ளோம்.

சில கால எல்லைக்குள் இந்த மூன்று விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அரசுக்குச் சொல்லவுள்ளோம்.

அவற்றை ஏனைய கட்சிகளுடனும் பகிர்ந்து ஒற்றுமையான நிலைப்பாட்டை இந்தப் பேச்சின் போது எடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தற்போது இடம்பெறும் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம். இந்த எல்லை மீள் நிர்ணயம் சில இடங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை உடனடியாக ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்துவதாகவும், அத்தோடு 60 இற்கு 40 என்ற வீதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாக உள்ள சட்டம் 70 இற்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்றத்திலும் அரசிடமும் தெரியப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெறும். அங்கு எமது கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான திகதியைத் தீர்மானிப்போம்.

தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது.

வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக் கொள்ளப்படுவது தொடர்பில் சென்ற முறை எமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து தனித்தனியாகப் போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கூடுதலான உறுப்பினர்கள் கிடைக்குமா? இல்லையா? என்கின்ற தொழில்நுட்ப ஆராச்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பில் நாம் சிந்திப்போம்.

ஜனாதிபதியுடனும் நீதி அமைச்சருடனும்  நான் பேசிய போது அரசியல் கைதிகள் 32 பேர் உள்ளனர் என்று  தெரிவித்துள்ளனர். அதில் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டது.  எனினும், ஜனாதிபதி அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் அவர்கள் குறித்த கொள்கையில் செயற்படுகின்றனர். அதாவது தலதா மாளிகைக்குக் குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை விடுவிப்பது இல்லை என முடிவு அவர்களிடம் காணப்பட்டது. எனினும், அவர்கள் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் அதனை மறுபரிசீலனை செய்வது எனத்  தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலவித சிக்கல்களைக் கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சு இடம்பெற்றது. நானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனைச் சந்தித்துக்  கலந்துரையாடினோம். அவர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாகக் கூறியிருக்கின்றார். எனவே, அந்த விடயங்கள் கையாளப்படும் என்று நம்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *