போதைக்கு எதிராக தீவக இளைஞர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:45 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு பிரிவாக, தீவக மறைக்கோட்டத்துக்கு உட்பட்ட பங்குகளை சேர்ந்த இளைஞர்கள் வேலனை பிரதேசத்தில் போதைவஸ்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இந்த சாட்சியமும் வீரமுமிக்க முயற்சியில் மண்டைதீவு, சாட்டி, நாரந்தனை, கரம்பொன், புங்குடுதீவு பங்குகளின் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
ஒரு பிரிவினர் மண்கும்பான் சந்தியிலிருந்தும், இன்னொரு பிரிவினர் வங்கலாவடி சந்தியிலிருந்தும் போராட்டத்தை ஆரம்பித்து சாட்டி திருத்தலத்தை நோக்கி பாதாதைகளை ஏந்தியவாரு பவனியாக வந்து போதைப்பொருளுக்கெதிராக குரல் கொடுத்தார்கள்.
தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்பணி நரேஸ் அடிகளார் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி டேவிட் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொலிசார், உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.