தமிழ் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பம்!

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.

இந்த நிலையில்,  அனைத்து கட்சித் தலைவர்களினதும் பங்கேற்புடன் இந்த சந்திப்பை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, இன்று கொழும்பில் இரண்டாம் கட்ட சந்திப்பு இடம்பெறுகிறது.

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *