ஊழல் மோசடிகள் அம்பலப்படுத்தப்படுவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை இந்த குழுக்களில் நியமிக்க கூடாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் குழுக்களில் நியமிக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
முறையான சமர்ப்பிப்புகள் இன்றி ஜனாதிபதியால் திடீரென நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசாங்கத்தின் பல முறைகேடுகள் தொடர்பாக கோப் குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.