நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.
நாட்டு நிலைமையை சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்த பிறகு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நாடு தற்போது கொரோனா சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள அதேவேளை, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களை சமநிலையாக அரசு பேணி வருகின்றது.
எனினும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் தரப்பினரால் உணரப்பட்டால் தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்தோடு, மீண்டும் அறிவிக்கும் வரை பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றார்.