6 மாதங்களுக்கு பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த எல்லை நிர்ணய குழுவை நியமித்தார்.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்து 100 முதல் 5 ஆயிரத்து 200 வரை குறைக்க முடியும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படுகின்றன.

கடந்த திங்கட்கிழமை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் மற்றைய மனுவும் தாக்கல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *