சுதந்திர தினத்திற்குள் தீர்வு – தமிழ் தரப்புகள் தற்போதும் மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்! – எச்சரிக்கும் சிவாஜி

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல் சமாளிக்கவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே இலங்கை அரசாங்கம் தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்கின்றது. நாங்கள் தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

சமகாலநிலை தொடர்பாக வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேச சமூகத்தை சமாளிக்க 75வது சுதந்திர தினத்திற்குள் தீர்வு தரப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார். தமிழ் தரப்புகள் தற்போதும் மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும். இந்த நேரத்தில் தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பை கோரி அதன் மூலம் தீர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

வெளிநாட்டு மத்தியஸ்தம் பொதுசன வாக்கெடுப்பு இல்லாமல் எந்தவொரு தீர்வையும் ஏற்கமுடியாது 

75 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினையை 70 நாட்களுக்குள் தீர்ப்பதாக கூறும் பூச்சாண்டிக்குள் தமிழ் தரப்புகள் சென்று அகப்பட கூடாது. 

தொடர்ந்து தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிங்கள தரப்புக்கு பலதடவைகள் தெளிவாக கூறப்பட்டுவிட்டது. 

இந்நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும். இல்லாவிடில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு பயனில்லை. இதனை தமிழ் தரப்புகள் நேரகாலத்துடன் அதனை அறிவிக்க வேண்டும்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *