இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்ட 45 ஆயிரத்து 831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
10 வயதுக்குட்பட்ட 19 ஆயிரத்து 688 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல் 10 மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்ட 26 ஆயிரத்து 143 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
14 வயதிற்கு கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
எனினும் இறுதி முடிவு இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.