விரைவில் சிறிலங்கா அதிபர் தேர்தல் – அரசியல் வட்டாரங்கள் தகவல்!

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா அதிபருக்கான தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் நிலைமையின் அடிப்படையில் அதிபர் தேர்தலை நடத்தினால் மாத்திரமே ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் என கருதுவதே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் நடத்தப்பட போவது எந்த தேர்தலாக இருந்தாலும் அதற்கு முன்னர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தவுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியின் யானை மற்றும் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச்சின்னத்திற்கு பதிலாக புதிய சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்த் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமாயின் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணியின் சார்பில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும் பொருளாதார நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் என்பவற்றை ஆராய்ந்து அந்த தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *