சுமந்திரன் மற்றும் தவராசாவிற்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை – அதிரடி காட்டும் மாவை!

எம்.ஏ.சுமந்திரனின் அறிக்கை மற்றும் தவராசாவின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த மாதம் 11 அல்லது 12ஆம் திகதிகளில் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் மற்றும் பிரச்சார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள்  எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகமாகசெயற்பட்ட தமிழரசு கட்சியில் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளை விமர்சித்தல் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருவதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா ,தமிழரசு கட்சியின்  தலைவர் என்ற ரீதியில் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் குற்றம் சுமத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தான் தயாராகவே உள்ளதாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *