ஆட்சியில் உள்ளவர்கள் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள் .! கட்டுப்பணம் எங்கே..???

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழுவில் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்திற்கு என்ன நடந்திருக்கும் என்ற பாரிய சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழு வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி 3 தரப்பினர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கும், நிதி அமைச்சிற்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளனார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை அளிப்பதற்காக மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக பண்டார சென்றிருந்ததுடன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவினால் உரிய முறையில் அந்தந்த கணக்குகளில் வைப்பிடப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அமைய மக்களுக்கு தகவல்களை வெளிப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து எவரேனும் பலவந்தமாக பெற்றுக் கொள்வார்களா? மத்திய வங்கியில் கொள்ளையிட்டதைப் போன்று கொள்ளையிடுவார்களா? தேர்தலை நடத்துவார்களா இல்லையா என்பது நாட்டு மக்களுக்கு பெரும்பிரச்சினையாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை.

மார்ச் 9 ஆம் திகதி நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் அன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *