உரப்பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (5) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பொதுச் சந்தையில் அமைந்துள்ள கடை ஒன்றில் இருந்தே பெண்ணின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று(05) காலை 11 மணியளவில் வங்கிக்குச் சென்ற அந்த பெண் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்றதாக தெரியவந்ததுடன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் உரப்பையில் போடப்பட்டு, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று வாழைச்சேனையிலுள்ள கடையில் சந்தேக நபர் வைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் உரப்பைகள் இரண்டினை தனது கடையில் வைத்து விட்டு சிறிது நேரத்தின் பின் எடுத்துச் செல்வதாக கூறியதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பெண்ணின் சடலம் வைக்கப்பட்ட கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.