அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்து மக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும்
ஆலயங்கள் உள்ளிட்ட பொதுமக்களினால் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்ற செயல்களும் வன்முறைகளும் பாடசாலை மாணவர்கள் நோக்கியதான போதைப் பொருள் விற்பனையும் பொதுமக்களாகிய தமது பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றது.
பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திவாறு போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி குரல் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.