ஜனாதிபதி தீர்வு தொடர்பாக தெரிவித்த உறுதி மொழியை அறிவித்தார் அமைச்சர் டக்ளஸ்!

தமிழ்பேசும் மக்கள் மற்றும் ஏனைய மக்களினுடைய அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததுடன் குறித்த விடயத்தை மக்களுக்கு உறுதியாக எடுத்துரைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில், நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் சமத்துவ உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மேற்கொள்ளப்படும் இந்த பூஜை வழிபாடுகள் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான ஆசி வேண்டுவதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் அனைத்து மதங்களின் ஆசியும் இதற்காக வேண்டப்படுவதுடன் அது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வகையில் நிலையான திட்டங்கள் வகுத்து செயற்படல் மூலம் அதனை வெற்றி கொள்ள முடியுமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *