இலங்கையில் இருள்சூழ்ந்த சுதந்திரம் – மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் போராட்டம்!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகிம்சை போராட்டத்தின் அடையாளமாக குல்லா தொப்பி அணியப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஊடாக ஊர்வலம் இடம்பெற்றதுடன் பாலத்தின் இரு மருங்கிலும் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து ஊர்வலம் கல்லடி பாலத்தின் அருகில் உள்ள மைதானம் வரையில் சென்றது.

இதன்போது இறுதி யுத்ததின்போது வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் குறித்து வீதி நாடகம் நடாத்தப்பட்டதுடன் அரசியல் கைதிகள் நிலைமைகள், தமிழர்களின் நிலைமைகள் குறித்த ஊர்தியும் இதன்போது ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.

ஊர்வலத்தினை தொடர்ந்து கல்லடி பாலம் இறக்கத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதன்போது இருள்சூழ்ந்த சுதந்திர தின உரைகளும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *