துறைமுக கிடங்குகளில் இருந்த 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான சொகுசு வாகனங்கள்! அமைச்சர் தகவல்

கொழும்பு துறைமுகத்தின் களஞ்சியசாலையில் உள்ள நானூறு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பொருட்கள் அடங்கிய 89 கொள்கலன்களை சுங்கத்துறை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒரு வாரத்திற்குள் அவற்றை அகற்றுமாறு துறைமுக அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களில் உள்ள சொகுசு வாகனங்களின் பெறுமதி மாத்திரம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு பாரிய தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், காலாவதியான சுங்கச் சட்டம் இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு உடனடியாக திருத்தம் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் பல வருடங்களாக களஞ்சியசாலைகளில் 89 கொள்கலன்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அமைச்சர் தெரிவித்தார்.

இவற்றில் 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட தேங்காய் கொள்கலன்கள் 12, 2019 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட39 பாசுமதி அரிசி கொள்கலன்கள், 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட சொகுசு பென்ஸ், ரேஞ்ச் ரோவர் மற்றும் 15 வாகனங்கள், 15 டைல் கொள்கலன்கள், 2 ஜவுளி கொண்ட கொள்கலன்கள், வாகனங்கள் 6 உதிரி பாகங்கள் கொள்கலன்கள், 2 ஒயின் கொள்கலன்கள், 1 சிகரெட் கொள்கலன் மற்றும் பல அடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள வேளையில், 39 பாசுமதி அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் மூன்று வருடங்களாக விடுவிக்கப்படாமல் வைத்திருந்ததால், அந்த அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு அழுகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply