வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்றைய தினம்(05) முல்லைத்தீவு நகரத்தில் நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(04) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான இந்த பேரணி நேற்று மாலை கிளிநொச்சி நகரை வந்தடைந்து அங்கிருந்து இன்று காலை பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதி வழியாக முல்லைத்தீவை நோக்கி புறப்பட்டது.
பேரணியாக வந்தவர்களுக்கு முல்லைத்தீவு விசுவமடு மக்கள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பூரண ஆதரவை நல்கியதோடு குளிர்பானம் மற்றும் தேநீர் என்பனவையும் கொடுத்து பரிமாறினர்.
நண்பகல் புதுக்குடியிருப்பு நகரை அடைந்த பேரணி பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சென்று அங்கு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது .
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரை நோக்கி புறப்பட்ட பேரணி மாலை 6:00 மணியுடன் முல்லைத்தீவு நகரில் இரண்டாவது நாளாக நிறைவடைந்தது. மீண்டும் நாளை காலை முல்லைத்தீவு நகரிலிருந்து கொக்கிளாய் வீதிவழியாக திருகோணமலை நகரை நோக்கி இந்த பேரணி செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.