ஸ்டைரியா கிராண்ட் பிரிக்ஸ்: ஜோர்ஜ் மார்ட்டின் முதலிடம்!

மோட்டோ ஜிபி தொடரின் ஸ்டைரியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்ட்டின் முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் பத்தாவது சுற்றான ஸ்டைரியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று ரெட் புல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்ட்டின், பந்தய தூரத்தை 38 நிமிடங்கள், 07.879 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சூசுக்கி அணியின் ஜோன் மிர், 1.548 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, 9.632 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் இதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள பத்து சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ நான்கு வெற்றிகளுடன் 172 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 132 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் சூசுக்கி அணியின் ஜோன் மிர், 121 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பதினொராவது சுற்றான ஒஸ்திரியன் ஜிபி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ரெட் புல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *