யுத்தம் முடிவடைந்ததும் தமிழர்களின் அழிவை பார்த்துவிட்டு சென்றவர் பாங்கிமூன் – மனோ முன்வைத்த பகிரங்க குற்றச்சாட்டு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்திருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த சில நாட்களில் இலங்கை வந்திருந்த பாங்கி-மூன் தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டுமென்றும் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன் வருகை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமல்ல என்றும்  ஒட்டு மொத்த ஐ.நா அமைப்பும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.பாங்கி-மூன் – மஹிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை  தவறுமானால்,
அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐ.நா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐ.நா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நாவின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது.  இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐ.நா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக மாமன்றமான ஐ.நா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும்.  அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக ஐ.நா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐ.நா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐ.நா செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *