தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா? – நீதிமன்றம் முடிவு செய்யும் – அமைச்சர் தெரிவிப்பு!

பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இந்தவேளையில் தேர்தலை நடத்தலாமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா என்பதை இந்த மாதம் 9 அல்லது 10ஆம் திகதிக்குள் நீதிமன்றம் தீர்மானிக்கும். 

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது. 

எட்டு மாதங்களுக்கு முன்பு, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை. தேவையான மருந்துகள் இல்லை. 

இப்போது பொருளாதாரத்தை சிக்கலோடு நிர்வகித்துக்கொண்டு தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது. 

ஒரு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவது அரசாங்கத்திற்கு இலகுவான விடயம் அல்ல.  

அண்மையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் இரண்டு கட்டங்களாக  வழங்க முடிவு செய்யப்பட்டது. 

சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. 

அப்படியயென்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவேண்டுமா என்று நாட்டில் பலர் கேட்கின்றனர். 

நீதிமன்றமும் அதில் கவனம் செலுத்தியிருப்பதாகவே கருதுகிறேன். அரசு என்ற முறையில் சிரமமாக இருந்தாலும், தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *