
யாழ்ப்பாணம் நாகவிகாரை அமைந்துள்ள காணி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் ஆலயத்துக்கு உரித்தான காணி என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நாகவிகாரை அமைந்துள்ள காணியின் ஆரம்பத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து வைத்தியத் தொழிலையும் முன்னெடுத்து வந்தார்.
தனது வழிபாட்டுக்காக ஒரு அரச மரத்தை நட்டு வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார். அவர் வசித்த காணி எமது வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கு உரித்தான காணி. காணி ஆவணங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் அதன் உண்மைகளை அறியாலம்.
சிலர் நாகவிகாரை காணி யாழ்.மாநகர சபைக்குரியது என்றும், சான். சபாபதி வழங்கிய காணி எனவும் கூறி வருகின்றனர். அக்கருத்துக்கள் எல்லாம் பொய்யான கருத்துக்களாகும்.
அன்றைய காலத்தில் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் உறவு இருந்தது. அதனடிப்படையில் அந்த காணி வழங்கப்பட்டிருக்காலம் என நினைக்கின்றேன்.
தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த மண்ணாகவும் எமது மண் உள்ளது. ஆனால் காணியின் பூர்விகத்தை எடுத் துப் பார்த்தால் அது வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு உரித்தான காணி.
அது தெளிவாக எனக்குத் தெரியும். ஆரியகுளத்தில் அரசமைப்பை மீறியதாக ஆளுநர் கடிதம் எழுதியிருப்பது தவறானது. ஆரியகுளத்தில் எந்த மத விடயங்களும் இருக்கவில்லை. இவ்வாறு இருக்க அரசமைப்பை மீறுவதாக ஆளுநர் மாநகர சபைக்கு எச்சரிக்கை விடுக்க வும் முடியாது – என்றார்.

