வவுனியா வைத்தியசாலையினூடாக வீட்டுமட்ட நோயாளர் சேவை

வவுனியா வைத்தியசாலையினூடாக வீட்டுமட்ட நோயாளர் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண ஆளுனரின் சிந்தனைக்கு அமைய மாகாண சுகாதார அமைச்சின் செயற்றிட்டத்தின் ஊடாக வீட்டு மட்டத்திலான நோயாளர் சேவை வவுனியா வைத்தியசாலையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் தைப்பொங்கலில் இருந்து குறித்த செயற்திட்டத்தினை வவுனியா வைத்தியசாலையில் ஆரம்பிக்க வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ள நிலையில் குறித்த வீட்டு மட்டத்திலான நோயாளர் சேவையினூடாக நீண்ட கால நோய் தொற்றுக்குள்ளானவர்கள், நோய் தாக்கத்தினால் படுக்கையில் உள்ளவர்கள், விசேட தேவைக்குரியவர்கள், வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதில் கடும் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் பயனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நோயாளர்களுக்கு வீடுகளுக்கு வந்து வவுனியா வைத்தியசாலை மருத்துவ குழுவால் சிகிச்சை வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த திட்டத்தினூடாக அவசர நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கப்படாது என்பதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் வவுனியா வைத்தியசாலையையே நாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த திட்டத்திற்காக விசேட தொலைபேசி இலக்கம் விரைவில் ஊடகங்களுடாக வழங்கப்படவுள்ளதுடன் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளின் ஒழுங்கிலேயே நோயாளர்களுக்கான சேவையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *