‘சர்வஜன வாக்கெடுப்பை’ நடத்தும் திட்டமில்லை!

“வேண்டுமானால் நாளையதினம்கூட சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால், அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை.” – என்று அரச கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மொட்டுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
“ சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினரான அமைச்சர் காமினி லொக்குகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. அதனை தடுக்க முடியாது. ஆனாலும் அவ்வாறு செல்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை.” – என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் சுதந்திரக்கட்சிக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது.  அரசுக்குள் இருக்கமுடியாவிட்டால் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் பங்காளிக்கட்சிகளுக்கு உள்ளன. அதில் நாம் தலையிட முடியாது.” – எனவும் காமினி லாக்குகே குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *