
இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயணிகளுக்குப் பிழையான கொவிட் பரிசோதனை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்பைஸ்ஹெல்த் எனப்படும் தனியார் ஆய்வகத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இத்தாலியின், ரோமில் இருந்து குறைந்தது 173 பயணிகளும், மிலனில் இருந்து 125 பயணிகளும் அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தபோது கொவிட் தொற்றுக்கு உறுதியானது.
ஆனால் இவர்களில் 30 பேருக்கு மீண்டும் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட போது அவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து ஸ்பைஸ்ஹெல்த் ஆய்வகத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை தற்போதைக்கு நிறுத்திவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் விதிகளுக்கு அமைய அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளைச் சோதிக்க டிசம்பர் 15 அன்று ஸ்பைஸ்ஹெல்த் ஆய்வகத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளது.