
நாளை வேண்டுமானாலும் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால், அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என அரச கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது’ என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினரான அமைச்சர் காமினி லொக்குகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. அதனைத் தடுக்க முடியாது. ஆனாலும், அவ்வாறு செல்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன.
அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசுக்குள் இருக்க முடியாவிட்டால் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் பங்காளிக் கட்சிகளுக்கு உள்ளன. அதில் நாம் தலையிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.