சந்திமால் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகுள் இழப்புக்கு 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சீன் வில்லியம்ஸ் 100 ஓட்டங்களையும் சகாப்வா 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப், வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கமிந்து மெண்டிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் மற்றும் பெத்தும் நிஸங்க ஆகியோர் தலா 75 ஓட்டங்களையும் சரித் அசலங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ரிச்சர்ட் ங்கரவா 3 விக்கெட்டுகளையும் முஸரபானி மற்றும் ஷிகண்டர் ரஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 91 பந்துகளில் 4 பவுண்ரிகள் 1 சிக்ஸர் அடங்களாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *