
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருள் பதுக்குவோர் கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கடைகளில் விலை பட்டியல் காட்சிப்படுத்தாமை, அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் மற்றும் கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்கப்படாமை போன்ற பிரச்சினை நிலவுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நானும் நேரடியாக சில வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பார்த்துள்ளேன். அங்கே விலைப்பட்டியல் காட்சிப்படுத்தியதாக இல்லை.
எனவே, இதுதொடர்பில் சகல உள்ளுராட்சி மன்றங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஒரு அறிவித்தலை கொடுக்கவுள்ளேன்.
அதாவது கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் பொருட்கள் பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கான உரிமங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க பணிக்கவுள்ளேன்.
மேலும், வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும்.
வடக்கு மாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
சிலர் நேரிலும் வந்து என்னை சந்திக்கின்றார்கள். சந்திக்க வருபவர்கள் சிறுசிறு பிரச்சினைகளோடு வருகின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சாதாரண மட்டபிரச்சனைகள் அதாவது கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஆனால், அவர்களால் தீர்க்கப்படாத விடத்து என்னிடம் வருகின்றார்கள். நான் என்னிடம் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது, அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்.
இதற்குப் பிறகு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதாவது அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொடர்பில் ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.