இரண்டு மாதங்களாக உப்பு நீரை குடிக்கும் மக்கள்! யாழில் அவலம்

மனித வாழ்வில் தண்ணீர் என்பது மிகவும் அத்திவாசியமான ஒரு பொருளாக காணப்படும் நிலையில், யாழில் பல கிராமங்கள் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இன்மையால் அல்லல் படுகின்றனர்.

இப்போது நாட்டில் நிலவும் விலைவாசிக்கு மத்தியில் ஒரு வேளை உணவு என்பதே கேள்வி குறியாக உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து உழைக்கும் 500 ரூபாவில், எப்படி குடும்பம் நடத்த முடியும், காசுக்கு தண்ணீர் வாங்கி குடிக்க முடியும்.

இவ்வாறான மக்களின் மன குமுறல்களை, உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் ஆவண முயற்சியை சமூக மீடியா உங்கள் முன் சமர்பிக்கின்றது.

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அரசால் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு சுமார் 2 மாதங்களாக குடிதண்ணீர் கிடைப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

நாம் முன்னர் அரச காணி ஒன்றில் வசித்தோம். பின்னர் வீடு குடிதண்ணீர் வசதியுடன் இருப்பதற்கு இடம் தருவதாக கூறி யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் நாம் குடியமர்த்தப்பட்டோம். முன்னர் ஆயிரம் லீட்டர் தண்ணீர் எமக்கு வழங்கப்பட்டது.

இப்போது சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக எமக்கு குடிதண்ணீர் இல்லை. சண்டிலிப்பாய் பிரதேச செயலக அதிகாரிகள் கூறுகின்றனர், கிணற்றறில் உள்ள உப்பு நீரை பயன்படுத்த அது பின்னர் சரியான நீராக மாறும் என்று. சீனாவே நீரை வடிகட்டி மக்களுக்கு கொடுக்கிறது.

ஆனால், இங்கு தண்ணீர் இல்லை, வெள்ளம் வருவதை தடுக்க மண்ணும் இல்லை. இங்கு எமது நிலைகளை பார்விடையிட வருகை தரும் அரச அதிகாரிகள் தமது வாகனத்தை விட்டு கீழே இறக்குவது இல்லை. முன்னர் இங்கு வருகை தந்த அங்கயன் எம்.பி இதற்கான வழிகளை செய்து தந்திருந்தார்.

இரணைமடு தண்ணீர் இங்கு வரும் என்ற கதை வேண்டாம். எமக்கு பவுசரில் தண்ணீர் கொண்டு வந்து இங்கே நிரப்ப வேண்டும். உப்பு தண்ணியில் குளித்தல் உடம்பு கசியும். எல்லாம் இந்த சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் கையில் தான் உள்ளது.

பாடசாலை மாணவர்களை எம்மால் பராமரிக்க முடியவில்லை. உப்பு நீரில் சீருடையை தோய்த்தால் என்ன நடக்கும். இரண்டு நாளுக்கு ஒருமுறை என்றாலும் தண்ணீர் இங்கு நிரப்பப்பட வேண்டும். காசு கொடுத்து தான் தண்ணீர், உணவு வாங்க வேண்டும். இப்போது பொருட்களும் விலை.

பொங்கலுக்கு முன்னர் 250 லீட்டர் தண்ணீர் தந்தார்கள். இது எதற்கும் காணும். இங்கு எமக்கு வீதிகளும் சீரில்லை. இங்கு 7 கிணறுகள் உள்ளன. அவை முழுவதும் உப்பு நீர். அதை மலசல கூடத்துக்கு கூட பயன்படுத்த முடியவில்லை. 250 ரூபாவுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம்.

சமைப்பதற்கு வைத்திருந்த காசை தண்ணீருக்கு கொடுக்க வேண்டி உள்ளது. மக்களை செத்து போகுமாறு தான் அரசு சொல்கிறது.

வாகனம் உள்ளவர்கள் அருகில் உள்ள மூத்த விநாயகர் ஆலயத்தில் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருவார்கள். வாகனம் இல்லாதவர்கள் என்ன செய்வது. கூலி வேலைக்கு சென்று உழைக்கும் பணம் 500 ரூபா. அதை தண்ணீருக்கு கொடுத்தல் நாம் எப்படி சாப்பிடுவது. இதற்கு ஒரு வழி உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும் என கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *