தெற்கில் காவி உடை தரித்தோருக்கு ஒரு சட்டம்- வடக்கில் சாதாரண மக்களுக்கு இன்னொரு சட்டமா? சத்திவேல் கேள்வி?

தெற்கில் காவி உடை தரித்தோருக்கு ஒரு சட்டம். வடக்கில் சாதாரண மக்களுக்கு இன்னொரு சட்டமா? என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரால் இன்று (11.02.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சுதந்திர தினத்தை 66 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கரி நாளாக அறிவித்தது மட்டுமல்ல அத்தினத்திற்கு எதிராக கறுப்பு கொடியேற்றிய வரலாறும் உண்டு. அதனை தொடர்ந்து பல்வேறு விதமான அடக்கு முறைகளையும் சந்தித்து தொடர்ந்து இன அழிப்பிற்கு முகம் கொடுத்து, இன படுகொலை அவலங்களை சுமந்து வரும் நிலையில் தமிழர்கள் கைகளில் சிங்கக் கொடியை திணித்து விழா நடத்தியதோடு அதற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் அரச பயங்கரவாத செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையின் அரசியல் யாப்பில் 36) ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என இந்த வாரம் பிக்குமார் திரலாக வீதியில் இறங்கி போராட்டம் செய்தனர்.13-ஆம் திருத்தத்தின் பிரதியை வீதியில் தீயிட்டு எரித்தனர். பொலிசாரின் செயற்பாடுகளுக்கு தடையாகவும் இருந்ததோடு பொலிசாரை வீழ்த்தி தள்ளி அராஜகம் புரிந்தனர். இது அரசியல் யாப்பையும், சட்டத்தையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கின்ற செயல் என்ற போதும் இது தொடர்பில் பொலிசார் வன்முறையை பிரயோகிக்கவில்லை. எவரையும் கைது செய்யவுமில்லை. ஏன்?

ஆனால் இன்றைய தினம் வடக்கில் போராட்டக்காரர்கள் சட்டத்தை மதித்து நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு செல்லாது ஜனநாயக வழியில் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் மற்றும் படையினர் வன்முறையை பிரயோகித்ததோடு பலவந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலரை கைது செய்துள்ளனர். இது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளனவா? அல்லது இந்த நாடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை கேட்க வைக்கின்றது.

அத்தோடு தெற்கின் காவி உடை தரித்தோருக்கு ஒரு சட்டம். வடக்கின் சாதாரண சிவில் மக்களுக்கு இன்னொரு சட்டமா? என இன் நல்லிணக்கம், அரசியல் தீர்வு பற்றி பேசும் ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.

தமிழர்கள் சுதந்திர தின விழாவை எதிர்ப்பார்கள் என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் சுதந்திர தின விழாவை ஒட்டி கலாச்சார மண்டப திறப்பு விழாவிற்கு இந்தியா இணங்கியது எவ்வாறு? இந்தியா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல. இது விடயத்தில் ரணிலின் நரி தந்திரத்தில் இந்தியா சிக்கிவிட்டதா? எனவும் கேட்கின்றோம்.

தமிழர்கள் 1957ஆம் ஆண்டு சுதந்திர நாளை கரி நாளாக அறிவித்து சிங்கக் கொடியை அகற்றி கறுப்பு கொடியை ஏற்றியுள்ளனர். அதில் கொல்லப்பட்டு தியாகியாகியுள்ளார் போராளி நடராஜ். அத்தகைய மரபில் வந்தவர்கள் இனப்படுகொலையும் முகம் கொடுத்து காயங்களோடு வாழ்வு போராட்டம் நடாத்திக் கொண்டிருப்பவர்கள் சுதந்திர தினத்தை அங்கீகரிப்பார்களா?

ஜனாதிபதி உட்பட அரசு தரப்பினர் யாழில் சுதந்திர தினம் நடத்த திட்டமிட்ட போதே அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் அதனை தடுத்திருக்க வேண்டும். அதனை செய்யது மட்டுமல்ல. இன்றைய விழாவிற்கு மக்களையும் திரட்டி இளைஞர் கைகளில் சிங்கக் கொடியையும் தூக்க செய்து விழா நடத்தி உள்ளனர். இது தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் அரசியல் எதிராக செய்த மாபெரும் துரோகமாகும், இதனை தமிழர்கள் மறக்க மாட்டார்கள், ஜனநாயக ரீதியில் தண்டனை கொடுப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *